த.வெ.க., கூட்டத்தில் உயிரிழப்புக்கு அரசும் போலீசும்தான் காரணம்: ஜோதிடர் புகார்
கரூர், '' கரூர் த.வெ.க., பொதுக்கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, தமிழக அரசும், போலீசும்தான் காரணம்,'' என, ஜோதிடர் சுந்தரம் தெரிவித்தார்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் சுந்தரம், 55, ஜோதிடர். இவர், நேற்று கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, சி.பி.ஐ., விசாரணை அலுவலகத்துக்கு த.வெ.க., பொதுக்கூட்டம் தொடர்பாக மனு அளிக்க வந்தார். ஆனால், விசாரணை நடந்து வருவதால், ஜோதிடர் சுந்தரத்தை வரும், 10ல் மனு கொடுக்க வருமாறு, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மனு கொடுக்காமல் திரும்பி சென்ற ஜோதிடர் சுந்தரம், நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பொதுக்கூட்டத்துக்கு, பேரனுடன் சென்றேன். அங்கு கூட்டத்தை, ஒரே இடத்தில் போலீசார் நிற்க செய்தனர். எனவே நெரிசல் ஏற்பட்டது. மேலும் காலணிகள், கத்தி வீசப்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர். இதனால், நான் பயந்து உடனே பேரனை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று விட்டேன். த.வெ.க., கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசும், போலீசும்தான் காரணம். இதுகுறித்து, சி.பி.ஐ., அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தேன். ஆனால், அவர்கள் என்னை வரும், 10ல் வரச்சொல்லி, மனுவை வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.