சின்னதாராபுரம் அருகே நிறுத்தப்பட்டஅரசு பஸ்: மீண்டும் இயக்க கோரிக்கை
அரவக்குறிச்சி:சின்னதாராபுரம் அருகே, எலவனுார் வழியாக சென்று வந்த அரசு பஸ், கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை மீண்டும் இயக்க மாணவ மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னதாராபுரம் அருகே எலவனுாரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகளான நஞ்சைக்காளிகுறிச்சி, நொச்சிபள்ளம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து, 50-க்கும்மேற்பட்ட மாணவ, மாணவியர் இங்கு வந்து படித்து வருகின்றனர். இவர்களிடம், தமிழக அரசு வழங்கியுள்ள இலவச பஸ் பாஸ் உள்ளது.ஆனால் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். கடந்த ஓராண்டாக அரசு பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சாலை வசதி சரியாக இல்லாததால் பஸ்சை நிறுத்தி விட்டதாக கூறுகின்றனர். எனவே, மோசமான சாலையை சரி செய்து நிறுத்தப்பட்ட பஸ்சை மாணவ மாணவியர் நலன் கருதி மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.