குற்றம் செய்யாமல் வாழ்வதே சிறந்தது; டி.ஆர்.ஓ.. பேச்சு
கரூர், நவ. 22-''எத்தகைய சூழலிலும், உணர்ச்சிவசப்படாமல் தன்னிலை உணர்ந்து, குற்றம் செய்யாமல் வாழ்வதே சிறந்தது,'' என, டி.ஆர்.ஓ., கண்ணன் பேசினார்.கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கிளைச்சிறையில், பொது நுாலகத்துறை சார்பில் தேசிய நுாலக வாரவிழாவை முன்னிட்டு, நடந்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடந்தது.டி.ஆர்.ஓ., கண்ணன் பேசியதாவது: சிறைவாசிகளின் ஓவியங்கள் பாராட்டு பெறும் வகையில் இருக்கிறது. உங்கள் ஒவ்வொருவரின் கலைத்திறன் கண்டு வியக்கிறேன். நீங்கள் வரைந்த ஓவியத்திலிருந்து தொடங்கும் மாற்றம், உங்களுக்கு தெளிவை தர வேண்டும். இத்தகைய திறன் கொண்டவர்கள் குற்றம் செய்திருப்பது வருத்தமளிக்கிறது. சிறைச்சாலைகள் என்பது தண்டனைக்கான இடம் அல்ல. சீர்திருத்தம் செய்வதற்காகத்தான். எத்தகைய சூழலிலும் உணர்ச்சி வசப்படாமல் தன்னிலை உணர்ந்து, குற்றம் செய்யாமல் வாழ்வதே சிறந்தது. குற்றச்செயல்களில் ஈடுபடாமல் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், கரூர் கிளைச்சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம், வாசகர் வட்டத்தலைவர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.