ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கரூர்:உதிரி பாகங்கள், காப்பீடு கட்டணம் உயர்வை கண்டித்து, ஜே.சி.பி., (பொக்லைன்) வாகன உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில், 200க்கும் மேற்பட்ட ஜே.சி.பி., வாகனங்கள் கட்டுமான தொழில், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜே.சி.பி., வாகனங்களின் காப்பீடு கட்டணம், உதிரி பாகங்கள் விலை கடும் உயர்வு, சாலை வரி உயர்வு, ஓட்டுனர் கூலி உயர்வு போன்றவற்றால் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.சாலை வரி, காப்பீடு கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வாடகை உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும், கரூர் மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டம் மூன்று நாட்கள், அதாவது மே 7 வரை நடக்கிறது. இந்த விலை உயர்வினால் ஜே.சி.பி.,வாடகை, இரண்டு மணி நேரத்துக்கு, 3,500 ரூபாய், ஒரு மணி நேரத்திற்கு, 1,400 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, அதன் உரிமையாளர்கள் சங்க தலைவர் -சுப்பிரமணி தெரிவித்தார்.