கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி, வீரராக்கியம் பாலம் பணிகள் விரைவில் தொடக்கம்
கரூர், டிச. 12-கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கரூரில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தவிட்டுபாளையம், மண்-மங்கலம், செம்மடை பிரிவு, பெரிச்சிபாளையம் பிரிவு, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய ஆண்டாங்கோவில் வளைவு, திருச்சி நெடுஞ்சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி பிரிவு ஆகிய பகுதிகளில் கிராமங்களில் இருந்து செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன. அந்த சாலையை கடந்து செல்லும் போது, விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடக்கும் போதெல்லாம், அப்பகுதி மக்கள் சாலை மறி-யலில் ஈடுபடுவர். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.இதையடுத்து, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் பெரிச்சிபாளையம் பிரிவு, பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு, செம்மடை பிரிவு, தவிட்டுப்-பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் மண்மங்கலம் பிரிவில், 22 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்-பாக நடந்து வருகிறது. ஜனவரி மாதம் சோதனை ஓட்டமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். அடுத்ததாக, கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் பணி தொடங்கவுள்ளது.இது குறித்து, தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கூறியதாவது: கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கோடங்கிபட்டி, வீரராக்கியம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இதில், கோடங்கிபட்டியில், 21.50 கோடி ரூபாய் மதிப்பில், 5.5 மீட்டர் உயரம், 15 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்படும். கோடங்கிபட்டியில் சாலையோரம் கிணறு உள்ளது. அதை மூட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கிணறு மூடப்பட்ட பின், பணிகள் தொடங்கப்படும்.வீரராக்கியத்தில், 18.50 கோடி ரூபாய் மதிப்பில், 5.5 மீட்டர் உயரம், 12 மீட்டர் அகலத்தில் பாலம் பணிகள் நடக்க உள்ளது. இங்கு, மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அது முடிந்தவுடன் பணிகள் தொடங்கும். இரண்டு பாலங்களிலும், சர்வீஸ் சாலை, மழைநீர் வடிகால் வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகிறது. இரு பாலங்களின் பணிகளை ஓராண்டுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.