மகனிடம் உள்ள சொத்தை மீட்க கோரி கலெக்டரிடம் தாய் மனு
கரூர், தன்னை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விட்ட மகனிடமிருந்து, சொத்தை மீட்டு தர வேண்டும் என, கலெக்டரிடம் தாய் மனு அளித்தார்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், அரவக்குறிச்சி அருகில் கூடலுார் மேற்கு பஞ்.,க்குட்பட்ட பெரியதிருங்கலத்தை சேர்ந்த மாலதி, 65, என்பவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:அரவக்குறிச்சி அருகில், பெரியதிருங்கலத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் தங்கவேல் இறந்த பின், 3 வயதிலிருந்து மகன் நல்லசிவத்தை வளர்த்து வந்தேன். தற்போது நல்லசிவமும், அவரது குடும்பத்தினரும், என்னிடம் இருந்து, 40 பவுன் நகை, 60 லட்சம் ரூபாய், 41 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி பறித்து கொண்டனர். மேலும் என்னை வீட்டை வீட்டு வெளியே அனுப்பி விட்டனர். சாப்பிட கூட வழியில்லாமல் தவித்து வருகிறேன். தற்போது உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறேன். இருந்தபோதும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்பட அனைத்தும் தரமறுக்கின்றனர். என் உயிருக்கு பாதுகாப்பு அளித்து, எனது சொத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.