நவராத்திரி ஆறாவது நாள் விழா; கரூர் கோவில்களில் கோலாகலம்
கரூர்: நவராத்திரி விழா ஆறாவது நாளையொட்டி, கரூர் கோவில்களில், உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ பெரு விழா கடந்த, 3ல் தொடங்கியது. நேற்று இரவு ஆறாவது நாளையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், உற்சவர் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில், நேற்று இரவு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், கரூர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மனுக்கு, லட்சுமி அலங்காரம், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், உற்சவர் அம்மனுக்கு ஸ்ரீ முருகன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், தான்தோன்றிமலை பகவதி அம்மன், மாரியம்மன் கோவிலில் நவராத்திரி, ஆறாவது நாளையொட்டி கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.