கிடப்பில் சாலை பணி துவங்க வலியுறுத்தி மனு
கிடப்பில் சாலை பணிதுவங்க வலியுறுத்தி மனுகரூர், நவ. 28-மா.கம்யூ., மாநகர செயலர் தண்டபாணி தலைமையில், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது:தான்தோன்றிமலை ஒன்றியம், மூக்கனாங்குறிச்சி பஞ்.,க்குட்பட்ட வால்காட்டுப்புதுார் முதல் நத்தமேடு வரை செல்லும் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கரூருக்கு பல்வேறு பணிகளுக்காக வால்காட்டுப்புதுார் முதல் நத்தமேடு வரையுள்ள மண் சாலை வழியாக செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு, மண் சாலையை தார் சாலையாக அமைக்கும் பணி தொடங்கினர். அது கிடப்பில் போடப்பட்டு விட்டதால், சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. மண் சாலையை தார் சாலையாக மாற்றும் பணிக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அந்த பகுதி மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட 11 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் பங்களிப்பை ஜனவரி மாதத்தில், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் காசோலையாக வழங்கப்பட்டது. எனவே, பஞ்., நிர்வாகம் கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை தொடங்க வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.