பனியால் உற்பத்தி பாதிப்பு: ஜெட் வேகத்தில் முருங்கை விலை
கரூர்: கரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள, கடும் பனிப்பொழிவால் அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முருங்கை உற்பத்தி குறைந்து, விலை உயர்ந்துள்ளது.அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கொத்தப்பாளையம், தடா கோவில், வெஞ்சாங்கூடலுார், ஈசநத்தம், அம்மாப்பட்டி, ஊத்துார், பெரிய மஞ்சுவளி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சீசன் காலங்களில் உள்ளூர் தேவைக்கு போக, நாள்தோறும் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு முருங்கைக்காய் அனுப்பப்படுகிறது.கரூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக அதிகளவில் பனிப்பொழிவு ஏற்படுவதால் முருங்கை உற்பத்தி குறைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ முருங்கை, 140 முதல், 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம், அதிகபட்சமாக கிலோ, 80 ரூபாய் வரை விற்றது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:நடப்பாண்டு வழக்கத்துக்கு மாறாக தொடர் மழை, கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால், முருங்கை மரங்களில் உள்ள பூக்கள் எளிதாக விழுந்து விடுகிறது. இதனால் காய் உற்பத்தி எதிர்பார்த்த அளவில் இல்லை. மேலும் காய்கள் முழு வளர்ச்சியடையாமல், சிறிய அளவில் பிசுபிசுத்து காணப்படுகிறது. மார்கழி மாதம் துவங்கிய நிலையில், அதிகளவில் பனிப்பொழிவு உள்ளது.வரும் தை மாதம், திருமண சீசன் உள்ளிட்ட, சுப காரியங்கள் தொடங்கும் நேரத்தில் முருங்கைக்கு அதிகளவில் தேவை ஏற்படும். பனிப்பொழிவால் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. தற்போது, முருங்கை விலை அதிகரித்துள்ள நிலையில், தை மாதத்தில் ஒரு கிலோ, 180 ரூபாயை தாண்ட வாய்ப்புள்ளது.இவ்வாறு கூறினர்.