நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க பேரிகார்டு வைக்க வேண்டுகோள்
கரூர்: கரூர் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அதை தடுக்க பேரிகார்டுகளை வைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகரை சுற்றி, மதுரை, திருச்சி, சேலம், கோவை நெடுஞ்சாலைகள், ஈரோடு மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. அதில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றவண்ணம் உள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இணையும், கிராம சாலை பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், அதிகளவில் விபத்து ஏற்படும், கோடங்கிப்பட்டி பிரிவு, வெங்ககல்பட்டி பிரிவு, வீரராக்கியம் பிரிவு, சுக்காலியூர் பிரிவு மற்றும் மண்மங்கலம் பகுதியில், காவல் துறை சார்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.மேலும், பல இடங்களில் வைக்கப்படாமல் உள்ளது. இதனால், கரூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, பேரிகார்டுகளை வைக்க, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.