பாதாள சாக்கடையால் சாலை சேதம்;வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர், கரூர் மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை உடைப்பு சீரமைக்கப்பட்ட இடங்களில் தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால் குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கடந்த, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட சணப்பிரட்டி பழைய கிராம பஞ்சாயத்து பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் வெங்கமேடு கருப்புசாமி சாலையில், பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டதால், பழுது பார்க்கும் பணி நடந்தது.அங்கு, சாலையில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. வேலைகள் முடிந்த பிறகு, தார்ச்சாலை அமைக்கவில்லை. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். இதுபோல பல இடங்களில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.