சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் அமோகம்: கரூரில் கூவிகூவி விற்பனை
கரூர்: தொடர் மழை காரணமாக, சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கரூரில், கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும், கடந்த ஜூலை மாதம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மானாவாரி நிலங்களில் பயிறு வகைகள் மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்தனர். குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரண-மாக கடவூர், தோகைமலை, குளித்தலை பகுதிகளில், சர்க்கரை வள்ளி கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் நாள்தோறும், மூட்டை மூட்டையாக சர்க்கரை வள்ளி கிழங்கு கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு வருகிறது. இதனால், கரூர் நகர பகுதிகளில் வேன் மற்றும் தள்ளுவண்டிகளில், ஒரு கிலோ சர்க்கரை வள்ளி கிழங்கு, 30 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்படுகிறது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:ஆண்டுதோறும், மாசி மாதத்தில் தான் சர்க்கரை வள்ளி கிழங்கு விற்பனைக்கு வரும். விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த வாரமே சர்க்கரை வள்ளி கிழங்கு விற்பனை வந்து விட்டது. கடந்-தாண்டு, ஒரு கிலோ சர்க்கரை வள்ளி கிழங்கு, 50 ரூபாய் வரை விற்றது. தற்போது, சைஸ் பெரிதாக இருந்தாலும், 30 ரூபாய்க்கு தான் கூவி கூவி விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. வரும் போகி பண்டிகை மற்றும் மஹா சிவராத்திரியின் போது, கிழங்கு வகைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கும்போது, விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.இவ்வாறு அவர்கள் கூறினர்.