டெக்ஸ் டெக் ஷோ கண்காட்சி நிறைவு
கரூர்: கரூரில் உள்ள பிரேம் மஹாலில், டெக்ஸ் டெக் ஷோ என்ற டெக்ஸ்டைல் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. மாவட்டத்தில், உள்ளூர், வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை உள்ளன. மாவட்டத்தில், ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக, 6,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருகிறது. இந்த நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 180க்கும் மேற்பட்ட ஜவுளி அரங்கங்கள், வீட்டு உபயோக ஜவுளி, பிரின்டிங் உள்ளிட்ட, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் என, ஒவ்வொரு பிரிவிலும், புதிய தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்படும் அதிநவீன இயந்திரங்களுடன் இடம் பெற்றுள்ளன. கரூர் எம்.பி., ஜோதிமணி, கண்காட்சியை நேற்று பார்வையிட்டார். இரண்டு நாள் நடந்த கண்காட்சியை, 8,000க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர் என, டெக்ஸ் டெக் ஷோ நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தெரிவித்தார்.