உயிரிழப்புக்கு மூச்சுத்திணறலே காரணம்: சுகந்தி ராஜகுமாரி மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்
கரூர்: ''உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில், பெரும்பாலானோர் உயிரிழப்புக்கு மூச்சுதிணறலே காரணம்,'' என, தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் சுகந்தி ராஜ குமாரி தெரிவித்தார். கரூர், த.வெ.க., பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, தமிழக மருத்துவ கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி நலம் விசாரித்தார். பின்னர் அவர், நிருபர் களிடம் கூறியதாவது: கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து, உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், இரண்டு பேர் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் நலமாக உள்ளனர். உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில், பெரும்பாலானோரின் உயிரிழப்புக்கு காரணம் மூச்சு திணறல் என்பது உறுதியாகி உள்ளது. உடற்கூறாய்வுக்கு மட்டும், 16 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மொத்தம், 60 முதல், 70 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களை தவிர சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களிலிருந்தும் மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இது தவிர, கரூர் தனியார் மருத்துவமனைகளில், 31 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.