பொக்லைன் இயந்திர வாகனத்தில் ஆபத்தை உணராமல் பயணம்
அரவக்குறிச்சி: பொக்லைன் இயந்திர வாகனத்தில், ஆபத்தை உணராமல் ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரவக்குறிச்சியில், சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அரவக்குறிச்சியில் இருந்து, கரூர் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. பணி முடிந்தவுடன் மதிய உணவு இடைவேளைக்காக, நெடுஞ்சாலை துறை அலுவலகத்திற்கு ஊழியர்களை அழைத்து வர வாகனங்கள் இல்லாததால், பொக்லைன் இயந்திரத்தின் முன் தகட்டில், 10க்கும் மேற்பட்டோர் நின்ற படி அரை கி.மீ., பயணம் செய்தனர். அப்போது, சில வாகன ஓட்டிகள் பொக்லைன் ஓட்டுனரை திட்டியபடி சென்றனர். ஆனாலும் அவர், ஊழியர்களை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இறக்கி விட்டு சென்றார். சாலையில் இது போன்று நடப்பதால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இது போன்ற ஓட்டுனர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.