உயர்மட்ட பாலத்தில் மரக்கிளை: சேதம் அடையும் அபாயம்
கரூர், நவ. 24-கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில், மரக்கிளைகள் முளைத்துள்ளது. இதனால், பாலம் சேதம் அடையும் நிலை உள்ளது.ஈரோடு-கரூர் ரயில்வே வழித்தடத்தின் குறுக்கே, மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரிக்காரம்பாளையம் பிரிவில், உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கன்னியாகுமரி வரை, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில், பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் பல இடங்களில், ஆலமரம், அரச மரத்தின் கிளைகள் முளைத்துள்ளது. தற்போது, கரூரில் மழை பெய்துள்ளதால், கிளைகளில் இலைகள் அதிகளவில் துளிர்த்துள்ளது. இதனால், பாலத்தின் உறுதி தன்மை கேள்வி குறியாக உள்ளது.மேலும், அரசமரம், ஆல மரத்தின் வேர்கள், கட்டடத்தை ஊடுருவி செல்லும். எனவே, பாலத்தில் முளைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.