போலீஸ் ஸ்டேஷன் அருகில் வாகனங்கள் நிறுத்தம் பசுபதிபாளையம் பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
கரூர், பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள, பாலத்தின் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கரூர், பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் உயர்மட்ட பாலத்தை ஒட்டி, பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர். புகார் கொடுக்க வருபவர்களின் வாகனங்களை நிறுத்த, ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி இல்லை. அங்கு வருபவர்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். மேலும், வாகன சோதனையில் போது பிடிபடும் கார்கள், சிறிய சரக்கு வாகனங்கள், ஆட்டோ போன்றவை பாலத்தின் ஓரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கனரக வாகனங்கள் செல்லும்போது சிரமப்பட வேண்டியுள்ளது. எதிரில் வாகனங்கள் வந்தால், வழிவிட முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில், சாலையோரத்தில் வாகனங்கள் இருப்பது தெரியாமல் மோதி விபத்து ஏற்படுகிறது. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன், வாகனங்களை நிறுத்த மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.