கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி போலீசார் பாணியில் நடவடிக்கை வருமா
கரூர்:கரூர் நகரில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை பிடித்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க, திருச்சி போலீசார் பாணியில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, ஜவஹர் பஜார், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவில், சாய்பாபா கோவில் உள்ளிட்ட பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிகின்றனர். அதில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மட்டும், கோவை சாலையில் வாகனங்கள் செல்லும் எதிர் திசையில் ஓடி, அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறார். மற்றவர்கள் அமைதியாக உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், திருச்சியில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசி, உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில், அந்த மாவட்டத்தை சேர்ந்த போலீசார், தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ஈடுபட்டனர். அதேபோல், கரூர் நகரில் சுற்றித்திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை பிடித்து, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.