பருவ மழை தொடங்கும் முன் கோவக்குளம் துார்வாரப்படுமா?
கரூர், பருவ மழை தொடங்கும் முன், கோவக்குளத்தை துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட கோவக்குளத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளத்திற்கு, அதிகப்படியான மழை பெய்யும்போது சேங்கல், முனையனுார், உப்பிடமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து சேரும். இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தால், சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட, 250 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். இதை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் நெல், கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்வர்.இங்கு, போதிய மழை இல்லாததால் குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. பருவ மழை பெய்தால், குளத்திற்கு அதிகளவில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. குளத்தை துார்வாரி பல ஆண்டு ஆவதால் குளம் முழுவதும் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி போய் உள்ளது. தண்ணீரை சேமிக்கும் வகையில் குளத்தில் உள்ள புதர்களை அகற்றினால் தண்ணீர் தேங்கி நிற்க வசதியாக இருக்கும். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு கோவக்குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரதிதாசன் பல்கலை முனைவர்படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு