கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் முழுமையாக நிரம்பியது 101, வறண்டது 218 ஏரிகள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழையால், 101 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மழை பெய்தும், 218 ஏரிகளில் தண்ணீர் இன்றி வறண்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகத்தின் கீழ், 1,097 ஏரிகள் உள்ளன. இதில், 49 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 152 ஏரிகளில், 50 முதல், 75 சதவீதம் வரையும், 205 ஏரிகள் நீரின்றி வறண்டும் உள்ளன. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 87ல் தற்போது, 55 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், 7 ஏரிகள், 50 முதல், 75 சதவீதம் வரை தண்ணீரும், 9 ஏரிகள் வறண்டும் உள்ளன. இதேபோல், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, நாகோஜனஹள்ளி, பாரூர், கெலமங்கலம் ஆகிய பேரூராட்சிகளிலுள்ள, 58 ஏரிகளில், 30ல், 75 முதல், 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ள நிலையில், 4 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன. மொத்தமுள்ள, 1,242 ஏரிகளில், 101 ஏரிகள் தன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஆனால் மழை பெய்தும், 218 ஏரிகளில் நீரின்றி வறண்டுள்ளன. கே.ஆர்.பி., அணை பாசன கால்வாய் வழித்தடத்தில் உள்ள, 24 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்திலுள்ள, 19 ஏரியில், 3 ஏரிகள் முழுவதும் நிரம்பியும், 3 ஏரிகளில், 60 சதவீதமும் தண்ணீர் உள்ளது. தொடர்மழையால் மற்ற ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.