உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகளுக்கு நிலப்பட்டா அரசு வழங்கியும்பதிவேடுகளில் மாறாததால் 148 பேர் புகார் மனு

விவசாயிகளுக்கு நிலப்பட்டா அரசு வழங்கியும்பதிவேடுகளில் மாறாததால் 148 பேர் புகார் மனு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த குருவிநாயனப்பள்ளி பஞ்.,ல், கலைஞர் இலவச நிலப்பட்டா திட்டதில், நிலம் பெற்றோர் சார்பில், 50க்கும் மேற்பட்டோர், தங்கள் நிலங்களை அரசு பதிவேட்டில் பதிவு செய்யவில்லை எனவும், பட்டா வழங்கியும் பயனில்லாமல் இருப்பதாக கூறியும், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:எங்கள் பஞ்.,ல், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த, 2006ல் நிலம் இல்லா ஏழைகளுக்கு கலைஞர் இலவச நிலப்பட்டா திட்டத்தில் தலா, 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதன்படி எங்கள் பஞ்.,க்கு உட்பட்ட காளிக்கோவில், செக்கான்குட்டை, கனியான் ஏரி, துரைஏரி, குண்டூஸ்கொள்ளை, போதகட்டு, சின்னகிணறு உள்ளிட்ட, 10 கிராமங்களில் நிலமில்லா விவசாயிகள், 148 பேரை தேர்வு செய்து நிலம் வழங்கி, அதற்கான பட்டாவையும் வழங்கினர்.ஆனால், அரசு பதிவேடு களில் எங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் பெயரை மாற்றாமல், புறம்போக்கு நிலமாகவே, காட்டி வருகின்றனர். எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்தாலும், ஆழ்துளை கிணறு, பம்பு செட் அமைக்க முடியவில்லை. கணினி சிட்டாவில், எங்கள் பெயர் இல்லாமல் மின் இணைப்பு கொடுக்க, அதிகாரிகள் மறுக்கின்றனர். பயிர்களை விலங்குகள் சேதப்படுத்தினால், நிவாரணம் பெறமுடியவில்லை. வங்கிகளில் கடனும் வாங்க முடியவில்லை. பி.எம்., கிசான் திட்டத்தில் உதவித்தொகையும் கிடைக்கவில்லை. எங்களுக்கு பட்டா வழங்கியும் அதை முழுவதுமாக பயன்படுத்த முடியாமல் வீணாக உள்ளது. இது குறித்து கலெக்டர், டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் அளித்தும், 18 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி வரவுள்ள நிலையில் தற்போதாவது, எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு, கணினி சிட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை