குடும்ப நிகழ்ச்சிக்கு சென்ற போது டூரிஸ்ட் பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்
போச்சம்பள்ளி, ஓசூர், பாகலுார் சாலையிலுள்ள வசந்தபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன், 56. இவர் மகள் தீபா, 35. திருவண்ணாமலையில் வசிக்கிறார். இவரது, 14 வயது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று மாலை, 6:00 மணிக்கு திருவண்ணாமலையில் நடக்க இருந்தது.அதற்காக ஓசூரிலிருந்து தனியார் டூரிஸ்ட் பஸ்சில், 45க்கும் மேற்பட்ட உறவினர்கள் சென்றனர்.கிருஷ்ணகிரி -- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், மத்துார் அடுத்த, தொகரப்பள்ளி வனப்பகுதி வளைவில் பஸ் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர, 3 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பஸ்சில் வந்த, 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.விபத்து நடந்த இடத்தில், ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், பர்கூர் தாசில்தார் சின்னசாமி, மத்துார் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.காயமடைந்தவர்கள் மத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.அரூர் பஸ் ஸ்டாண்டில் குடிநீரின்றி மக்கள் அவதிஅரூர், ஜூலை 3அரூர் பஸ் ஸ்டாண்டில் பெயரளவிற்கு உள்ள குடிநீர் குழாய்களால், குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலையில், பயணிகள் உள்ளனர். அரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, சேலம், திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, பெங்களூரு மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு, ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். கடந்தாண்டு, அக்., 24ல், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், நவீனப்படுத்தப்பட்ட அரூர் பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். அப்போது, பஸ் ஸ்டாண்டின் முன்பகுதியில், குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இவற்றில் குடிநீர் வருவதில்லை. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கடைகளில் குடிநீர் பாட்டிலை விலைக்கு வாங்கி சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.