முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி 1,848 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் நடந்த, முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டியில், 1,848 பேர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள், 7வது நாளாக நேற்று நடந்தது. போட்டியின் துவக்க விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். டி.எஸ்.பி., முரளி, சி.இ.ஓ., (பொ) முனிராஜ் ஆகியோர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில், பள்ளி மாணவ, மாணவியருக்கான கைப்பந்து போட்டியில், 176 பேர், கோ-கோ போட்டியில், 396 பேர், சிலம்பம் போட்டியில், 210 பேர், இறகுபந்து போட்டியில், 330 பேர், கபாடி போட்டியில், 216 பேர், கூடைப்பந்து போட்டியில், 240 பேர் பங்கேற்றனர். அரசு ஊழியர்களுக்கான தடகள போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என, 160 பேரும், கையுந்துபந்து போட்டியில், 120 பேரும் என மொத்தம், 1,848 பேர் பங்கேற்றனர்.இப்போட்டிகள் கடந்த மாதம், 26ல் துவங்கி வரும், 12 வரை, பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என, 5 பிரிவுகளில், 37 விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, 3,000 ரூபாய், 2ம் பரிசு, 2,000 ரூபாய், 3ம் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.