உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வெவ்வேறு இடத்தில் சா‍லை விபத்து 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பலி

வெவ்வேறு இடத்தில் சா‍லை விபத்து 2 வாலிபர்கள் உட்பட 3 பேர் பலி

ஓசூர், கோவை மாவட்டம், ஒத்தக்கல்மண்டபம் அருகே ஆதித்யா நகரை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் நவீன், 19. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உப்கார் லேஅவுட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருடன், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்த அஸ்ரப் உசேன், 19, என்பவரும் பணியாற்றினார். இருவரும் கடந்த, 14ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், டி.வி.எஸ்., ரேடியான் பைக்கில் சென்றனர். அப்போது, ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் எதிரே வந்த, பஜாஜ் பல்சர் பைக் மோதியது. இதில் நவீன் மற்றும் பல்சர் பைக்கில் வந்த, தர்மபுரி மாவட்டம், பாலாலஹள்ளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுதர்சன், 19, ஆகியோர் பலியாகினர். பைக்கை ஓட்டிச்சென்ற திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த நந்தகுமார், 20, உடன் வந்த தர்மபுரி மாவட்டம், போலம்பள்ளியை சேர்ந்த சச்சின், 19, மற்றும் நவீனுடன் சென்ற அஸ்ரப் உசேன் ஆகிய, 3 பேர் படுகாயமடைந்தனர்.சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், பாரண்டஹள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார், 45. ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, ஓசூர் - பாகலுார் சாலையில் புல்லட்டில் சென்றார். பாலாஜி நகர் அருகே, அவ்வழியாக கிருஷ்ணகிரி அடுத்த குரியபனப்பள்ளியை சேர்ந்த, தனியார் மருத்துவமனை ஊழியர் கிருஷ்ணமூர்த்தி, 31, என்பவர் ஓட்டி வந்த மாருதி சுசூகி இக்னிஸ் கார், புல்லட் மீது மோதியது. இதில் படுகாயமைடைந்த சிவக்குமார், பலியானார். அவரது மனைவி ஸ்ரீதேவி, 43, புகார் படி, கார் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை, நல்லுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை