உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டு விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம் டில்லியில் கைதான இளம்பெண்ணின் காதலன் வாக்குமூலம்

ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டு விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம் டில்லியில் கைதான இளம்பெண்ணின் காதலன் வாக்குமூலம்

ராயக்கோட்டை: 'சொகுசாக வாழ ஆசைப்பட்டு, ஆபாச வீடியோவை பெண்களிடம் காட்டி பணம் பறிக்கும் நோக்கில், விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம்' என, பெண்கள் தங்கும் விடுதியில் கேமரா வைத்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் அருகே, 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கும் 'விடியல் ரெசிடென்சி' விடுதியில், 4வது பிளாக், 8வது மாடியிலுள்ள ஒரு குளியலறையில், பெண் தொழிலாளர்கள் குளிப்பதை படம் பிடிக்க ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது. கேமரா வைத்ததாக, அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒடிஷாவை சேர்ந்த நீலுகுமாரி குப்தா, 23, அவரது காதலன் ரவி பிரதாப் சிங், 29, ஆகியோரை, உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். ரவி பிரதாப் சிங்கிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். போலீசார் கூறியதாவது: நீலுகுமாரி குப்தா, ரவி பிரதாப் சிங் நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன், ஒடிஷாவைச் சேர்ந்த சந்தோஷ், நீலுகுமாரி குப்தாவை காதலிப்பதாக கூறியுள்ளார். இருவரிடமும் நீலுகுமாரி குப்தா பழகி வந்தார். இந்நிலையில், நீலுகுமாரி குப்தாவிடம், 'சொந்தமாக கார் வாங்க வேண்டும். அதில் உன்னை ராணி போல அழைத்துச் செல்ல வேண்டும்' என, ஆசையை துாண்டுவது போல ரவி பிரதாப் சிங் பேசியுள்ளார். அதற்கு பணம் சம்பாதிக்க இருவரும் திட்டம் தீட்டினர். 'தான் தங்கியுள்ள விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்து, அதில் பதிவாகும் ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி, மிரட்டி பணம் பறிக்கலாம்' என, நீலுகுமாரி குப்தா யோசனை தெரிவித்துள்ளார். அக்., 19ம் தேதி இருவரும் பெங்களூருவில் சந்தித்து கேமரா வாங்கியுள்ளனர். இந்த கேமராவை குளியலறையில் நீலுகுமாரி குப்தா பொருத்தி உள்ளார். கடந்த 2ம் தேதி, வடமாநில பெண் தொழிலாளி ஒருவர், குளியலறையில் ரகசிய கேமரா இருப்பதை பார்த்து நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். எப்படியும் சிக்கி கொள்வோம் என பயந்த நீலுகுமாரி, ரவி பிரதாப் சிங்கிற்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார். அவரும், சந்தோஷ் தான் கேமரா வைக்க சொன்னதாக கூறி, போலீசாரிடம் மாட்டிவிடுமாறு கூறிவிட்டு, போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார். அதன்படி, சந்தோஷை கடந்த மாதம் 19ம் தேதி பெங்களூருவில் சந்தித்ததாக நீலுகுமாரி குப்தா போலீசில் கூறினார். அன்றைய தேதியில் சந்தோஷ் மொபைல் போன் எண் ஒடிஷா மாநிலத்தில் இருந்ததாக, டவர் சிக்னல் வாயிலாக போலீசார் உறுதிபடுத்தினர். நீலுகுமாரி குப்தா மொபைல் போனை ஆய்வு செய்தபோது, கடைசியாக அவர் நவ., 2ம் தேதி இரவு, 11:45 மணிக்கு, ஒரு எண்ணுக்கு போன் செய்ததும், அது, 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்ததும் தெரிந்தது. அந்த எண், நீலுகுமாரி குப்தா பெயரில் இருப்பதும், அதை ரவி பிரதாப் சிங் பயன்படுத்தி வந்ததும் உறுதியானது. ரவி பிரதாப் சிங் பயன்படுத்தும் மற்றொரு எண்ணை, நீலுகுமாரி குப்தாவிடம் பெற்று, அதன் சிக்னல் மூலமாக டில்லி சென்று, அவரை நேற்று முன்தினம் கைது செய்தோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை