பவானிசாகர் நீர்மட்டம் 90 அடியாக உயர்வு
புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 90.18 அடியாக உள்ளது.பவானிசாகர் அணையின், நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து, 4,158 கன அடியாக இருந்த நிலையில், நேற்று காலை, 5,556 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் மாலையில், 1,317 கன அடியாக குறைந்தது. மாலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம், 90.18 அடியாகவும், நீர் இருப்பு 21.7 டி.எம்.சி.,யாகவும் உள்ளது.ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்துள்ளதால், அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில், 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.