உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானை நடமாட்டம் உள்ள கிராமத்தில் பிரசவம்

யானை நடமாட்டம் உள்ள கிராமத்தில் பிரசவம்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே தேவன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதவன் மனைவி ஆனந்தி, 23. இவர், தன் இரண்டாவது பிரசவத்திற்காக தாய் வீடான தொளுவபெட்டா பழையூர் கிராமத்திற்கு சென்றார். வனப்பகுதிக்குள் இந்த கிராமத்திற்கு, 10 கி.மீ.,க்கு மேல் தார் சாலை வசதி மற்றும் பஸ் வசதி கிடையாது. யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிக்கு நடுவே உள்ள வழிப்பாதையில் தான் செல்ல முடியும். கார், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்வது சிரமம். ஆனந்திக்கு, நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்நேரத்தில் யானைகள் நடமாட்டம் இருக்கும் என்பதால், ஆனந்தியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் தயங்கினர்.கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ், 40 கி.மீ.,யில் இருந்து தான் வர வேண்டும். அதுவரை காத்திருந்தால் தாய், சேய் உயிருக்கு ஆபத்து என்பதால், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தன் காரில், கிராம செவிலியர் சத்யா, சுகாதார ஆய்வாளர் சந்தோஷ், நவீன்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு, நள்ளிரவு 12:10 மணிக்கு ஆனந்தி வீட்டிற்கு மருத்துவ உபகரணங்களுடன் சென்று பிரசவம் பார்த்தார். அடுத்த சில நிமிடங்களில், ஆனந்திக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. நஞ்சு கொடியை அகற்றிய மருத்துவர் ராஜேஷ்குமார், ஆம்புலன்ஸ் வாகனம் வர தாமதமானதால் தாய், சேயை தன் காரில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். ஒன்றரை கி.மீ., காரில் சென்ற பின், ஆம்புலன்ஸ் வந்தது.அதில், தாய், சேய் இருவரும் பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர். நேற்று காலை, 6:30 மணிக்கு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துணிச்சலான மருத்துவ குழுவினரை, மலை கிராம மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை