ஆன்லைனில் பட்டாசுகள் ஆர்டர் மோசடி என எஸ்.பி.,யிடம் புகார்
கிருஷ்ணகிரி: 'குறைந்த விலையில் பட்டாசுகள் தருவதாக கூறி, எங்களை ஏமாற்றி விட்டனர்' என, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்த பாலாஜி என்பவர் கூறியதாவது: கடந்த, 10 நாட்களுக்கு முன் என்னை, 'சிவகாசி, பாண்டியன் கிராக்கர்ஸ் கம்பெனியிலிருந்து மேனேஜர் பேசுகிறேன்' எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டார். மேலும், 'ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து, பணம் கொடுத்தால் போதும், குறைந்த விலையில் அதிக பட்டாசுகள் உங்கள் வீடு தேடி வரும்' என்றார். நானும் அவர்களின் இணையதளம், தொலைபேசி எண்களை பரிசோதனை செய்தேன்; சரியாக இருந்தன. இதையடுத்து, 30,000 ரூபாய்க்கு நானும், பட்டாசுகளை ஆர்டர் செய்தேன். பலரும் பட்டாசுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, பாண்டியன் கிராக்கர்ஸ் நிறுவனத்தினர் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் மொபைலுக்கு பணத்தை அனுப்பி உள்ளனர். கடந்த சில நாட்களாக அந்த மொபைல் எண்கள், இணையதள பக்கங்கள் செயல்படவில்லை. இதே போல, மோசடி பல இடங்களில் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.