தெருவில் குழாய்கள் சேதம்:குடிநீரின்றி மக்கள் அவதி
ஓசூர்;ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி காமராஜ் நகரில், பாதாள சாக்கடை பணிக்காக சமீபத்தில் குழி தேண்டினர். இதில், வீட்டு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவு நீர் கால்வாய் இணைப்புகள் சேதமடைந்தன. இதனால் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காமராஜ் காலனி, 8வது குறுக்கு தெருவில், ஒரு வாரமாக தண்ணீரின்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.இதற்கிடையே, சேதமான குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்களை சரிசெய்யாமல், மற்ற இடங்களில் சிமென்ட் கலவையை போட்டு சென்றுள்ளனர். இதனால் சாலையில் ஆங்காங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.