காவிரி ஆற்றில் நீர் அளவீடு பணி மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
அஞ்செட்டி, தமிழக எல்லையான அஞ்செட்டி அருகே பிலிகுண்டுலு கிராமத்தில், மத்திய நீர்வளத்துறை சார்பில், காவிரி ஆற்றில் தினமும் நீர் அளவீடு செய்யும் பணிகள் நடக்கிறது. அப்பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் நீர் அளவீடு பணி குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், பாம்பு, நாய் கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பு விபரங்களை பார்வையிட்டார்.அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டி தர வேண்டும் என, டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், நாட்றாம்பாளையத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், அரசிற்கு கருத்துரு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.மாவனட்டி கிராமத்தை சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவியான பிரகாஷ் மகள் மதுமிதா என்பவர், தனக்கு இருதய நோய் பாதிப்பு இருப்பதால், சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.தொடர்ந்து, அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது, ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, கூடுதல் கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், தாசில்தார் கோகுல்நாத் உடன் இருந்தனர்.