போலீஸ் ஸ்டேஷன் அருகே தீக்குளித்த டிரைவர் சாவு
கிருஷ்ணகிரி, ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், வாகனம் ஏலம் போனதால், மனமுடைந்த டிரைவர், போலீஸ் ஸ்டேஷன் அருகே தீக்குளித்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டம், அரகாசனஅள்ளியை சேர்ந்தவர் மாதேஷ், 40, டிரைவர். கடந்தாண்டு இவர் ரேஷன் அரிசி கடத்தி வந்தபோது, கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். பறிமுதலான சரக்கு வாகனத்தை கடந்த, 30ல் ஏலம் விட இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தானே வாங்கி கொள்வதாக மாதேஷ் கூறிய நிலையில், அன்றைய தினம் மாதேஷ் வர தாமதம் ஆனது. இதனால் அந்த வாகனத்தை வேறு ஒருவர், 65,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதில் மனமுடைந்த மாதேஷ், கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஸ்டேஷன் அருகே தன் உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.