உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முறையாக இழப்பீடு பணம் வழங்காமல் நிலம் கையகப்படுத்த விவசாயி எதிர்ப்பு

முறையாக இழப்பீடு பணம் வழங்காமல் நிலம் கையகப்படுத்த விவசாயி எதிர்ப்பு

ஓசூர், ராயக்கோட்டை அருகே, 4 வழிப்பாதைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு முறையான இழப்பீடு வழங்காமல், கெயில் நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையும் சம்பந்தப்பட்ட நிலத்தை அபகரிக்க முயல்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த கருக்கனஹள்ளியை சேர்ந்தவர் அருண்குமார், விவசாயி. இவருக்கு தீபா என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுடன் அருண்குமாரின் பாட்டி குப்பம்மாள் ஆகியோரும், அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி ஒன்றாக வசிக்கின்றனர். கடந்த, 2021ல், தேசிய நெடுஞ்சாலை துறையினர், பெங்களூரு -- தர்மபுரி வரையிலான எண். 844 புறவழி நான்கு வழி சாலை திட்டத்திற்காக குப்பம்மாளின் வீடு மற்றும் நர்சரி பண்ணை உள்ளிட்ட விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கான இழப்பீடு தொகையாக, 68.39 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தனர். அதன்பின், 46 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. நர்சரி பண்ணை உள்ள இடத்திற்கு, கூடுதலாக மதிப்பீடு தொகை போடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.இதை எதிர்த்து, குப்பம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நீதிமன்றம் கூறிய தொகையையும் வழங்க மறுத்து, வீட்டை இடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினரும், கெயில் நிறுவனத்தினரும் முயல்வதாகவும், இது குறித்து மாவட்ட கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ