தொழிற்கல்வி மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சி முகாம் துவக்கம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் மாவட்ட தொழிற்கல்வி மாணவர்களுக்கு உள்ளுறை பயிற்சி முகாம் துவங்கியது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் தொழிற்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 28 பள்ளிகளில் பயிலும், 554 மாணவர்களுக்கு, 80 மணி நேர (10 நாட்கள்) தொழிற் கல்வி உள்ளுறை திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடக்கிறது. இதன் துவக்க விழா, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ராஜன் தலைமை வகித்து பேசுகையில், “தொழிற்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும், இப்பயிற்சியில் ஆர்வமுடன் கலந்துகொள்ள வேண்டும். தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கம், நேரம் தவறாமை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை கடைபிடித்து ஒரு தொழில்முனைவோராக வர வேண்டும், '' என்றார்.