போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றம்; வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு மக்கள் பூட்டு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, போலி ஆவணங்கள் மூலம், சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்ததாக கூறி, அப்பகுதி மக்கள் வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பழையூரை சேர்ந்தவர் பிரியா, 41. இவர் அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரிடம், 13 சென்ட் நிலத்தை கடந்த, 2022ல் வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவும் முடிந்த நிலையில் கடந்த, 2023, ஜூலை 22ல், நிலத்திற்கான பட்டா பிரியா பெயரில் மாறியுள்ளது. ஆனால், 10 நாட்களில் தர்மலிங்கம் பெயருக்கே பட்டா மாறி உள்ளது. இது குறித்து கம்மம்பள்ளி வி.ஏ.ஓ., காளீஸ்வரனிடம் முறையிட்டும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, பிரியா, தன் கணவர் மகாலிங்கத்துடன் நேற்று வி.ஏ.ஓ., காளீஸ்வரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, கத்தாலமேட்டை சேர்ந்த சுரேஷ், 25 என்பவரின், 2 ஏக்கர் நிலம், கெட்டூர் முருகேசனின், 68 சென்ட் நிலம் மற்றும் பழையூர் முனியப்பனின், 35 சென்ட் நிலங்களும் சட்டவிரோதமாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக கூறி அவர்களுடன், 100க்கும் மேற்பட்டோர் வி.ஏ.ஓ.,வை முற்றுகையிட்டு, அலுவலகத்தினுள் இருவர் இருந்த நிலையில், அலுவலகத்திற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம், மகாராஜகடை எஸ்.ஐ., நடராஜன், கம்மம்பள்ளி பஞ்., தலைவர் சென்றாயப்பன், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய தீர்வை, 10 நாட்களில் மேற்கொண்டு, வி.ஏ.ஓ., காளீஸ்வரனிடம் விசாரிக்கப்படும் என, கிருஷ்ணகிரி தாசில்தார் உறுதி அளித்திருப்பதாக கூறியதையடுத்து, வி.ஏ.ஓ., அலுவலகத்தை திறந்து விட்ட போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.