ஓசூரிலுள்ள மருந்தகங்களில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு (பொறுப்பு) டி.எஸ்.பி., ஜெய்சிங் ஜான் தலைமையில், ஓசூர் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு, மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் தாமோதரன் மற்றும் போலீசார், ஓசூர் எம்.ஜி., ரோட்டில் மருத்துவமனைகளுக்கு மொத்தமாக மருந்து, மாத்திரை சப்ளை செய்யும், மெடிக்கல் ஸ்டோரில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்த போலீசார், மருத்துவமனைகளுக்கு வழங்க வைக்கப்பட்டுள்ள எரிசாராயம், ஆசிட் போன்றவை உரிமம் இல்லாத நபர்களுக்கு வழங்கப்படுகிறதா என, மெடிக்கல் ஸ்டோரில் இருந்த ஆவணங்களை பார்த்தனர். அனைத்தும் சரியாக இருப்பது தெரிந்தது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும் என, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.