ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் செங்கதிர் செல்வன் பேசினார். மாவட்ட பொருளாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை, 10,000 ரூபாயாக உயர்த்தி, பஞ்., மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும். 2009 ஜூன், 1 முதல் சிறப்பு அரசாணை எண்: 234ன் படி, மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு, சிறப்பு காலமுறை ஊதியம், 15,000 ரூபாய் வழங்க வேண்டும். பஞ்., செயலர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து, பஞ்., ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும், அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். என்.ஆர்.இ.ஜி.எஸ்., திட்டத்தில், 18 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.