6,208 மாணவர்களுக்கு ரூ.190 கோடி கல்விக்கடன்
கிருஷ்ணகிரி, ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 4 ஆண்டுகளில், 6,208 மாணவ, மாணவிகளுக்கு, 190 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் முகாமை துவக்கி வைத்து, 3.41 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கடனுதவி வழங்கி பேசியதாவது: மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில், 1,710 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 59.03 கோடி ரூபாய் மதிப்பிலும், நடப்பாண்டில், 779 மாணவ, மாணவிகளுக்கு 23.28 கோடி ரூபாய் மதிப்பிலும் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில், 6,208 மாணவ, மாணவிகளுக்கு, 190 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 மாணவ, மாணவியருக்கு, 50 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.கல்வி கடன் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.