கமிஷன் தராததால் பள்ளி கட்டடம் கட்டும் பணி 3 மாதமாக நிறுத்தம்: மாணவர்கள் அவதி
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஒன்றியம் சுங்கர ஹள்ளி ஊராட்சியில் சுங்கரஹள்ளி, முல்லை நகர், வத்தல்மலை பால்சிலம்பு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இதில், வத்தல்மலை பால்சிலம்பு கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இங்கு அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் படிக்க கூடுதல் வகுப்பறை கட்ட அப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த, 3 மாதங்களுக்கு முன், 36 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டு பணி நடந்தது. ஆனால், பணி செய்யும் ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட கமிஷன் தொகையை அரசியல் வாதிகளுக்கு கொடுக்காததால் பள்ளி கட்டடம் கட்டும் பணியை தொடரக்கூடாது. கமிஷன் கொடுத்து விட்டு கட்டடம் கட்டவும் என அரசியல் வாதிகள் கெடுபிடி காட்டியுள்ளனர். இதனால், கடந்த, 3 மாதமாக பள்ளி கட்டடம் கட்டும் பணி நிற்கிறது. மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: வத்தல்மலை பகுதியில் முழுக்க முழுக்க மலைவாழ் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறோம். கல்வி என்பது எங்களுக்குத் எட்டாக்கனியாக உள்ளது. உயர்கல்விக்கு செல்ல வேண்டும் எனில் தர்மபுரி, கடத்துார், பொம்மிடி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டும். தொடக்ககல்விக்காக, எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கின்றோம். ஆனால் போதுமான அடிப்படை வசதி இல்லை. போதிய கட்டட வசதி இல்லை. இதை அரசு செய்தாலும் அரசியல் வாதிகள் அதை தடுக்கின்றனர். தற்போது, 36 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் கட்டப்படுவது, கமிஷன் கொடுக்காததால் அரசியல் வாதிகளால் நிறுத்தப்பட்டுள்ளது. இது மலைவாழ் மக்களுக்கு செய்யும் துரோகம்.