காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சிறப்பு தீர்மானம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் அம்சவேணி தலைமை வகித்து பேசியதாவது:காவேரிப்பட்டணத்தின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 54 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலைக்கு நடுவே சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருகின்றனர். அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. எனவே புத்தாண்டில் காவேரிப்பட்டணம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே நம் முதல் பணியாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.எர்ரஹள்ளி, குண்டலபட்டி பஞ்.,களுக்குட்பட்ட பகுதிகளை காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் இணைக்க நடவடிக்கை எடுப்பது, காவேரிப்பட்டணம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டவுன் பஞ்., துணை தலைவர் மாலினி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.