மேலும் செய்திகள்
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு
26-Jul-2025
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 974 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் அணையில் பெய்த கனமழையால், நேற்று காலை நீர்வரத்து, 1,150 கன அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில், 927 கன அடி, வலது, இடது கால்வாயில் பாசனத்திற்கு, 88 கன அடி என மொத்தம், 1,015 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதிக தண்ணீர் வெளியேற்றத்தால், தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்கவோ, ஆடு, மாடுகளை சுத்தம் செய்யவோ, துணி துவைக்கவோ மக்கள் செல்ல வேண்டாம் என, வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரில், சுத்திகரிப்பு செய்யாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் அதிகளவில் கலந்திருந்ததால், ஆற்றில் ரசாயன நுரை ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசியது. அதேபோல், பாசன கால்வாய்களிலும் ரசாயன நுரை தேங்கி, காற்றில் பறந்த வண்ணம் இருந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, ஆங்காங்கு மிதமானது முதல், கனமழை பெய்தது. அதிகபட்சமாக கெலவரப்பள்ளி அணையில், 38 மி.மீ., அளவிற்கு மழை பதிவாகி இருந்தது. அதன்படி ஊத்தங்கரையில், 31 மி.மீ., பாம்பாறு அணை, 30, ஓசூர், 27, கிருஷ்ணகிரி, 15.30, கே.ஆர்.பி., அணை, 12, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டையில் தலா, 11, தளியில், 10, பெனுகொண்டாபுரத்தில், 5.30, நெடுங்கல், சூளகிரி, சின்னாறு அணையில் தலா, 2, போச்சம்பள்ளியில், 1 மி.மீ., என மொத்தம், 197.8 மி.மீ., அளவிற்கு மழை பதிவாகி இருந்தது.
26-Jul-2025