மதுரையில் தொடங்கியது புத்தக திருவிழா
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். மாலையில் நடந்த துவக்க விழாவில் கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் வரவேற்றார். அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: 16 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் புத்தக திருவிழா நடத்த காரணமாக இருந்தவர் அன்றைய கலெக்டர் உதயச்சந்திரன். இன்று அரசு விழாவாக இப்புத்தகத் திருவிழா நடக்கிறது. மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு சிறப்பாக இத்திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவைப் போல 10 நாட்கள் இது நடக்கவுள்ளது.இன்று அரசுப் பள்ளிகளில் பயிலும் அதிகமானோர் குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் புத்தக வாசிப்பு மூலம் தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு கலைஞர் நுாலகம், புத்தக திருவிழா போன்ற வசதி, வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா நன்றி கூறினார். மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், துணைத் தலைவர் புருஷோத்தமன், செயலாளர் முருகன், பொருளாளர் சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பூமிநாதன் எம்.எல்.ஏ., பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இத்திருவிழாவில் 231 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4, 5ம் ஸ்டால்களில் தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. தினமலர் ஆண்டு சந்தா ரூ. 1999 செலுத்தினால் ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். மாலையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம், கருத்தரங்கு உள்ளிட்டவை நடைபெறும். அனுமதி இலவசம். பள்ளி மாணவர்களுக்கு புத்தக விற்பனையில் தள்ளுபடி உண்டு. மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் இரண்டாயிரம் பள்ளி மாணவர்கள், ஆயிரத்து 500 கல்லுாரி மாணவர்களை பஸ்சில் இலவசமாக அழைத்து வந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.