ஆர்ப்பாட்டம்
மதுரை: உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் (யு.ஏ.டி.டி., ) 2.0 ஐ ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகம் முன்பாக ஆர்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ரமணன், செயலாளர் தன்ராஜ், இணைச் செயலாளர் ஜனரஞ்சனி முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலாளர் முத்துக்குமரன் பேசுகையில் ‘‘யு.ஏ.டி.டி., 2.0 திட்டம் தோட்டக்கலைத் துறையின் தனித்துவத்தையும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகளையும் பாதிக்கும். ரத்து செய்து அரசாணை வெளியிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்’’ என்றார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் நீதிராஜா, மாவட்டத் தலைவர் தமிழ், செயலாளர் சந்திரபோஸ், விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.