| ADDED : ஜூன் 13, 2024 06:36 AM
மதுரை: மதுரை கலெக்டர் அறை நேற்று முதல் மீண்டும் கம்பீரமான பழைய கட்டடத்திற்கே மாற்றப்பட்டு செயல்படத் துவங்கியது.ஏழு ஏக்கரில் பரந்து விரிந்துள்ள கம்பீரமான இக்கட்டடம் 116 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் இறுதி கட்டத்தில் அருகிலேயே புதிய கட்டடம் கட்டி, கலெக்டர், டி.ஆர்.ஓ., கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) என முக்கிய அதிகாரிகள், வருவாய், நிலஅளவை, பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், கலால், கனிமவளம், சமூகநலம் உட்பட பல அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்கு இடமாற்றப்பட்டது.முழுவதும் கற்களால் ஆன பழைய கட்டடம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் விடப்பட்டு, பழைமை மாறாமல் அதனை பொலிவூட்டினர். இந்தக் கட்டடத்திலேயே மீண்டும் அமர்ந்து செயல்படுவதென கலெக்டர் சங்கீதா முடிவெடுத்தார். அதற்கேற்ப அலுவலகத்தில் மீண்டும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து கலெக்டர், வருவாய் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர், ஏ, சி, ஜி பிரிவு அலுவலகங்கள் பழைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டன. நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கலெக்டர் சங்கீதா, நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மீண்டும் புதிய கட்டடத்தில் அமர்ந்து பணிகளை துவக்கினர். மற்ற பிரிவுகளும் விரைவில் இங்கு செயல்பட உள்ளன. மேலும் நகரின் பிறபகுதிகளில் வாடகை கட்டடங்களில் செயல்படும் அரசு அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அடுத்து பழைய, புதிய கட்டடங்களுக்கு இடையே பாலம் அமைக்கவும் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் இவ்வளாகத்தில் இயங்கும் மதுரை வடக்கு தாலுகாவை தல்லாகுளம் பகுதிக்கு இடம்மாற்றவும், அங்கு புதிய கட்டடம் கட்டவும் அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. தெற்கு தாலுகா அலுவலகத்தை மாற்றவும் இடம் தேர்வு நடக்கிறது.