| ADDED : ஜூன் 19, 2024 04:51 AM
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா வரிவசூலில் முறைகேடு நடந்ததாக மக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அறநிலையத்துறை விசாரணை குழுவை அமைத்துள்ளது.ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றது. சமீபத்தில் பால்குடம், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவுக்காக கோயில் சார்பில் வரி வசூலிக்கப்படும். அப்படி வசூலித்து வழங்கப்பட்ட ரசீது போலியானவை. செயல் அலுவலர் சண்முகப்ரியா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி அறநிலையத்துறை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரையிடம் மக்கள் புகார் கொடுத்தனர். போலீசிலும் புகார் செய்யப்பட்டது.போலீசார் கூறியதாவது: திருவிழா பிரசாதம் வழங்க அறநிலையத்துறை சார்பில் வரி வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரே 'சீரியல்' எண்ணுடன் ரூ.1500, ரூ.100 என எழுதப்பட்டிருந்தது.இது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கோயில் தரப்பில் உரிய பதில் அளிக்காததால் எங்களிடமும், அறநிலையத்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. அறநிலையத்துறை சார்பில் 5 பேர் கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. நாங்களும் விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில்தான் எவ்வளவு தொகைக்கு முறைகேடு நடந்துள்ளது என தெரியவரும் என்றனர்.இதற்கிடையே செயல்அலுவலர் சண்முகப்ரியா, ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், வரி வசூலுக்காக கோயில் ஊழியர்களிடம் வழங்கிய ரசீதுகளை சிலர் முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர். யாரென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.