குவாரி விபத்தில் 6 பேர் பலி; நடவடிக்கை கோரி வழக்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை:: சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டை கல்குவாரி விபத்தில் 6 பேர் பலியானதில் கவனக்குறைவாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பொன்காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் 'தி மேகா புளூமெட்டல்ஸ் ஸ்டோன் கிரஷர்,' கல்குவாரி செயல்பட்டது. இதற்கு கனிமவளத்துறை வழங்கிய உரிமம் 2024ல் முடிந்தது. மே 20ல் பாறைகளை தகர்க்க வைத்த வெடிகளால் பாறைகள் சரிந்தன. தொழிலாளர்களில் 6 பேர் இறந்தனர். சட்டவிரோதமாக அபாயகரமான வெடி மருந்தை பயன்டுத்தியதால் விபத்து நடந்தது. எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். 2019ல் பிறத்த அரசாணையின்படி மாவட்டம், தாலுகா அளவில் உயர்நிலை குழு அமைத்து அடிக்கடி குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். சட்டவிரோத குவாரிகள் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தகை உரிமம் 2024ல் முடிவடைந்தபோதும் சட்டவிரோத குவாரி மீது நடவடிக்கை இல்லை. கவனக்குறைவாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரிகளை கண்காணிக்க மாவட்டம், தாலுகா அளவில் உயர்நிலை குழு அமைக்க வேண்டும். சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜரானார். அரசு பிளீடர் திலக்குமார், 'சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமவளத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அத்துறையின் கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,' என்றார். நீதிபதிகள் தமிழக தொழில்துறை முதன்மை செயலர், கனிமவளத்துறை கமிஷனர், சிவகங்கை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்கள் ஒத்திவைத்தனர்.