அழகர்கோவில் ரோடு பயணிக்கு ஆம்புலன்ஸ் சேவை அவசியம்; பள்ளம், மேட்டை சரிசெய்ய மாட்டீர்களா
மேலுார்: அழகர் கோவில் ரோடு சிதிலமடைந்து மேடு பள்ளமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலுார் - அழகர் கோவில் ரோட்டில் அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், அழகர்கோவிலில் முருகனின் ஆறாம் படை வீடான சோலைமலை உள்ளது. இதனால் இந்த ரோட்டை 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலா பயணிகளும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த ரோட்டில் இரவு, பகல் எந்நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.ஆனால் போக்குவரத்துக்கு ஏற்ப இந்த ரோடு நன்றாக இல்லை. சாலை முழுவதும் மேடு, பள்ளமாக சிதிலமடைந்து கிடக்கிறது. வாகனங்கள் விரைந்து செல்ல இயலாமல் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சமூக ஆர்வலர் ஸ்டாலின் கூறியதாவது: இந்த மெயின் ரோடு பெயர்ந்து ஜல்லிக்கற்களாக கிடக்கிறது. இந்த ரோட்டில் டூவீலரில் பயணித்தால் விபத்தை சந்தித்து, ஆம்புலன்ஸில் செல்வது நிச்சயம் என்னும் அளவுக்கு உள்ளது. குடும்பத்துடன் டூவீலரில் சென்ற பலர் தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர்.மேலும் இந்த ரோட்டில் தெருவிளக்குகள் இல்லாததால் பக்தர்களின் வாகனங்கள் பள்ளத்தில் விழுவதும் அன்றாட ஆபத்து நிகழ்வாக உள்ளது. ஒரு சில தினங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. பக்தர்கள், வாகனங்கள் வருகை அதிகரிக்கும். அதற்கேற்ப ரோட்டை சீரமைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.