| ADDED : நவ 15, 2025 05:12 AM
மதுரை: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது என முடிவு செய்துள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்பட தென்மாவட்டங்களில் 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இக்கட்சியின் தமிழ் மாநிலக்குழுக்கூட்டம் உசிலம்பட்டியில் நடந்தது. இதில் வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது, கட்சியின் சிங்கம் சின்னத்தில் போட்டியிடுவது என உறுதிசெய்யப்பட்டது. இதைதொடர்ந்து சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை தமிழ் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் தலைமையில் மத்திய குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் சந்தித்தனர். நமது நிருபரிடம் கதிரவன் கூறியதாவது: ஏற்கனவே அ.தி.மு.க., கூட்டணி அமைத்து உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். கடந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பழனிசாமியை சந்தித்து பேசினோம். தென்மாவட்டங்களில் 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். உசிலம்பட்டி, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிகளை கேட்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.