மருத்துவக்கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்த வழக்கு
மதுரை: தமிழகத்தில் மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு மேலாண்மைக் குரிய வசதிகளை ஏற்படுத்த தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. மதுரை வெங்கடேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: மருத்துவக் (பயோமெடிக்கல்) கழிவு மேலாண்மை (2019) விதிமுறைகளின்படி, அக்கழிவுகளை 48 மணி நேரத்திற்குள் அறிவியல் பூர்வமாக கையாள வேண்டும். மாறாக சில இடங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளுடன் கலக்கப்படுகிறது. அவற்றை பாதுகாப்பற்ற முறையில் எரிக்கும்போது எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகிறது. விதிகள்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கழிவு மேலாண்மை மையம் நிறுவ வேண்டும். அம்மாவட்ட எல்லைக்குள் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை கையாள வேண்டும். தற்போது 5 முதல் 6 மாவட்டங்களை சேர்த்து கையாளப்படுகிறது. இதனால் கழிவுகள் தேங்கி சி க்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. விதிகளுக்கு புறம்பாக மருத்துவக் கழிவுகளை கையாள்வதால் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்பு உள்ளிட்ட அழுக்கு துணிகளை நீர்நிலைகளில் சலவை செய்கின்றனர். நீர் மாசுபடுகிறது. நோய்கள் பரவுகிறது. மாவட்டந்தோறும் மருத்துவக் கழிவு மேலாண்மைக்குரிய வசதிகளை ஏற்படுத்தக் கோரி தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். நீதிபதிகள்,'மனுவில் கோரும் நிவாரணத்திற்குரிய விதிகளை மனுதாரர் தரப்பில் செப்.23 ல் தாக்கல் செய்ய வேண்டும், 'என உத்தரவிட்டனர்.