இலவச சீருடை, புத்தகம் வழங்குவதில் இழுபறி
மதுரை : தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை, புத்தகம் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.ஆண்டுதோறும் 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 செட் சீருடைகள், பருவத் தேர்வுக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். சீருடைகள் முதலில் 2, அதன் பின் தலா ஒன்று வீதம் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும். தற்போது இரண்டாம் பருவத் தேர்வு நடக்கிறது. டிச.,23 முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு மீண்டும் ஜன.2ல் பள்ளி திறக்கப்பட உள்ளது. ஆனால் நான்காவது செட் சீருடைகள், மூன்றாம் பருவத்திற்கான இலவச புத்தகங்கள் இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. வழக்கமாக அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு முன்பாக இவை மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு வினியோகத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறுகையில், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. அதற்குள் வழங்காவிட்டால் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எந்த பாடத்தை நடத்த வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும் என்றனர்.