தடம்புரண்ட சரக்கு ரயில் ஒரு மணி நேர சேவை பாதிப்பு
சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து, கடற்கரை ரயில் நிலையத்துக்கு, சரக்கு கன்டெய்னர்களுடன் ரயில் ஒன்று நேற்று வந்தது. சரக்கு கன்டெய்னர்களை இறக்கிவிட்டு காலி சரக்கு ரயில், அங்கிருந்து மாலை 4:40 மணிக்கு, தண்டையார்பேட்டை சரக்கு முனையம் நோக்கி புறப்பட்டது. சில நிமிடங்களில், சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கான எட்டு சக்கரங்கள் தடம் புரண்டு, தரையில் இறங்கியது. சத்தம் கேட்டதும், ஓட்டுனர் ரயிலை நிறுத்திவிட்டு, ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து, தரையில் இறங்கிய சக்கரங்களை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஒரு ரயில் தண்டவாளத்தில், மின் ரயில் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி வரும் ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இருப்பினும், கடற்கரை முதல் ஆவடிக்கு வழக்கம் போல மின்சார ரயில்கள் இயங்கின.இதற்கிடையில், தடம்புரண்ட சரக்கு ரயிலின் சக்கரங்களை, தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர். சரக்கு ரயில் தடம் புரண்டதால், ஒரு தடத்தில் ரயில் சேவை ஒரு மணிநேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது. நேற்று இரவு, 7:30 மணிக்கு பின், ரயில்களின் சேவை துவங்கினாலும் மெதுவாக இயக்கப்பட்டன. இரவு 8:00 மணிக்கு பின், அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.